கடையம் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு

கடையம் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு


கடையம்:


கடையம் அருகே உள்ள மேட்டூர் வெய்க்காலிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது 62), விவசாயி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவரை காணவில்லை. இதனால் அவரது மனைவி, சுப்பிரமணியம் காணாமல் போனது குறித்து கடையம் போலீசில் புகார் அளித்தார்.


இந்நிலையில் இன்று காலை கல்குவாரியில் சுப்பிரமணியத்தின் சட்டை மற்றும் லுங்கி இருப்பதாக அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து கடையம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு சென்ற போலீசார், சுப்பிரமணியம் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.


உடனே இந்த தகவலை அம்பை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கல்குவாரியில் சுப்பிரமணியத்தின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்பு அவர்கள் சுப்பிரமணியத்தின் உடலை மீட்டனர். பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.